×

தாம்பரம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் 92 சவரன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் அருகே இரும்புலியூர், பெரியார் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன் (38). இவரது மனைவி நாகமணி (31). இருவரும் தாம்பரத்தில் வருமானவரி கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் ஜெயசீலன் பெரிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க, கடந்த 6ம் தேதி ஜெயசீலன் சென்றுள்ளார். பின்னர் கடந்த 9ம் தேதி சிவகங்கையில் அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, தனது மனைவி நாகமணியை தொடர்பு கொண்ட ஜெயசீலன், தான் சிவகங்கை செல்வதாகவும், வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் அங்கு வரும்படி கூறியுள்ளார்.இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு வீட்டை பூட்டிக்கொண்டு நாகமணி மற்றும் குடும்பத்தினர் சிவகங்கைக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர், ஜெயசீலன் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன், தாம்பரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷகிலா தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பீரோ உடைக்கப்பட்டு, நாகமணி வைத்திருந்த சுமார் 92 சவரனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து, சுவர்,கதவு மற்றும் பீரோவில்  பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் புகாரின்பேரில், தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்….

The post தாம்பரம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் 92 சவரன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : 92 Sawan ,Congress ,Thambaram ,TAMBARI ,Jayaselan ,Periyar, Irumbuliur ,nagamani ,Tambaram ,92 Shaving robbery ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...